சொந்தப் புத்தியும் இல்லை... ஆளுமை திறனும் இல்லை... 10 ஆண்டுகள் உடனிருந்தவரே ஸ்டாலினை பங்கம் செய்த சம்பவம்!
அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படும் நிலையில் மு.க. ஸ்டாலின் உள்ளார். அவரிடம் ஆளுமை என்பதே இல்லை. முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் ம.சின்னசாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைகிறார். இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் சின்னசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக திமுகவில் பயணித்தேன். ஆனால், சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிக்காமல் தட்டிக்கழித்தனர்.
கரூரில் மக்கள் ஆதரவுள்ள எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் காரணமல்ல. அவருடைய பின்னணியில் உள்ளோர் தடுக்கிறார்கள். ஏதோ ஒரு சக்தி அவரை சுயமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். அது ஐ-பேக்கும் கிடையாது. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தோரே தடுக்கிறார்கள். அவர் வீட்டில் கிச்சன் கேபினட் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட நான் வாய்ப்பு கேட்டேன். தற்போது போட்டியிடும் வேட்பாளரைவிட, எனக்கு தகுதி குறைவாக இருந்தால், நானே வாய்ப்பு கேட்கபோவதில்லை.
தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் எதையாவது காரணத்தைச் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். ஒரே ஒரு முறை மட்டும் எனக்கு வாய்ப்பு அளித்தார்கள். இதுகுறித்து ஸ்டாலினிடமே பேசினேன். ஆனால், சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலையில் அவர் உள்ளார். ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. நன்கு பழகக்கூடியவர்தான். ஆனால், கருணாநிதியைப் போல ஆளுமை கிடையாது. அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படும் நிலையில் உள்ளார். அவரிடம் ஆளுமை என்பதே இல்லை. எனவே, திமுகவை விட்டு விலகுகிறேன்.” என்று சின்னசாமி தெரிவித்தார்.