மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்ககே முழு அதிகாரம் உள்ளதாக  புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அப்பீல் மனுவை  தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கை விசாரித்த சென்னை உச்சநீதிமன்றம் , புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பெடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் அமைச்சரவை முடிவு அடிப் படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பிலும், கிரண்பெடி சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை மே 10-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், எதிர்மனுதாரரான கே.லட்சுமிநாராயணன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி புதுச்சேரி கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சை அணுகுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.