உங்களை யாரும் ரயில் எரிப்பாளர்கள் என தூற்ற மாட்டார்கள்... வன்முறையாளர்களை ஊக்கப்படுத்திய ராமதாஸ்..!
தமிழகத்தில் அதே போல நடக்கும் போராட்டத்தை ஊக்குவிக்காமல் எப்படி தட்டிக் கேட்பார்?
மாற்றம், முன்னேற்றம் என முழங்குகிறார் பா.ம.க,வின் அன்புமணி, ஆனால் அவரது ஆதரவாளர்களோ போராட்டம் என்ற பெயரில் ரயில் மீது கல்லெறிதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதுதான் உங்கள் மாற்றம், முன்னேற்றமா என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனாலும் 2016ம் ஆண்டு, ’ஆந்திர இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல் நிலையம், ரயில் எரிப்பு நடந்த போது கவலை வேண்டாம். உங்களை யாரும் ரயில் எரிப்பாளர்கள் என தூற்ற மாட்டார்கள்’ என உற்சாகப்படுத்தி ட்விட் போட்டவர்தான் இந்த பாமக ராமதாஸ் என பழைய சம்பவங்களை நினைவூட்டுகிறார்கள். தமிழகத்தில் அதே போல நடக்கும் போராட்டத்தை ஊக்குவிக்காமல் எப்படி தட்டிக் கேட்பார்?
வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.,வினர் சென்னையில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து பா.ம.க.வின் சென்னை நோக்கி பயணித்தனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு முன்பே பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் #இடப்பங்கீடுபோராட்டம் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. அந்த சமூகத்தை பலரும் எங்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என காலை முதலே பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குறிப்பாக பா.ம.க.,வினர், ரயிலை மறித்து அவற்றின் மீது கற்களை வீசி எறிவதும், ரயில் நின்ற பின்பும் கற்களை தூக்கி தாக்கும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இதை சுட்டிக்காட்டியும், இன்னும் பிற அசம்பாவித சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பெருங்களத்தூரில் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பலர் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியும், வன்முறையை பா.ம.க, தூண்டி வருகிறது என குற்றம் சாட்டியும் டுவிட்டரில் பா.ம.க,வை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆனது. அதில் பெரும்பாலும் பா.ம.க,வின் அன்புமணி, ''மாற்றம் முன்னேற்றம்'' என கொள்கையை முன்வைத்து முழங்குகிறார். இதுதான் உங்களின் மாற்றம், முன்னேற்றமா என கேள்வி எழுப்பினர். இதனால் இடஒதுக்கீடு தொடர்பாக டுவிட்டரில் ஆதரவாக #இடப்பங்கீடுபோராட்டம் என்ற ஹேஷ்டாக்கும், எதிராக #BanPMK என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகி வருகின்றன.