திமுகவால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வேட்பாளர் எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்..!
அதிமுக வேட்பாளர் இந்திராணி திமுகவினர் கடத்திவிட்டதாகவும், வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மதுரை வாடிப்பட்டி பேரூராட்சியின் அதிமுக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்திவிட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக வேட்பாளர் இந்திராணி, வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில், 9வது வார்டில் அதிமுக சார்பில் இந்திராணியும், திமுகவின் சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுக வேட்பாளர் இந்திராணி திமுகவினர் கடத்திவிட்டதாகவும், வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்திராணி பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;- என்னை யாரும் கடத்தவில்லை. குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் நிலை காரணமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்ட கூறப்பட்ட நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்று அவரே நேரில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.