எவ்வளவோ CASE இருக்கு.. ராஜேந்திர பாலாஜி மீது மட்டும் ஏன் இந்த வெறி.? DGP அலுவலகத்தில் கதறிய பாபு முருகவேல்.
சென்னை தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு நிலுவையில் இருக்கும் போதிலும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டு வருவதாகவும் அதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வழக்கறிஞர் பிரிவு பாபு முருகவேல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா மற்றும் மழை வெள்ளத்தின் போது அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் எது கட்சிகளான அதிமுக, பாஜக தமிழக அரசினை திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு என்றும், பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்கள் குறைத்தும், அதன் மீதான மாநில வரியை திமுக அரசு ஏன் குறைக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து திமுக அரசு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி ரெய்டு நடத்தி வருவதாகவும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ரெய்டுகள் நடந்து வருவதகாவும் அதிமுகவினர் திமுக மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி விட்டது என்றும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது திமுகவுக்கு ஏவல் வேலை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர். இது ஒரு புறமிருக்க. அதிமுக வழக்கறிஞர் பிரிவு அணியை சேர்ந்த பாபு முருகவேல் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருதுநகர் மாவட்ட காவல்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், ராஜேந்திர பாலாஜியை மட்டும் அவ்வளவு விரைவாக காவல்துறை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் சென்னை தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு நிலுவையில் இருக்கும் போதிலும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது காவல்துறை அளவுகடந்த வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், அதை கைவிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞர்களின் வீடுகளில் காவல்துறை சோதனை நடத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.