No grounds to proceed against Kamal
நடிகர் கமல் மீதான புகாரில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸ் கூறியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன், அண்மையில் நிலவேம்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நிலவேம்பு குறித்து சரியான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை நமது இயக்கத்தார் நிலவேம்பு கசாயத்தை விநியோகிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்தது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கடந்த 19 ஆம் தேதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
நடிகர் கமல் ஹாசன், நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை சொல்லி இருக்கிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து கமல் ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தேவராஜன் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் கமல் ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று தெரிவித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸ் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், மத்திய குற்றபிரிவு சைபர் க்ரைம் போலீஸ், நடிகர் கமல் மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளது.
இதையடுத்து, கமல் மீதான புகாரில் குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லாததால், அவருக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
