No free goods in MNM party ruling told kamal hassan

எம்என்எம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என்றும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும், வசதி வாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் நீங்களே மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய நடிகர் கமலஹாசன், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.



மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.

கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார்.வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.

பின்னர் ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் பொது மக்கள் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.அப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் இலவசமாக தருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்.

நாங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என பதில் அளித்தார். வேலைவாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் . வசதி வாய்ப்பு பெருக வேண்டும் என கூறிய கமல் , நீங்களும் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.

ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை என்றும், எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? என்றார்.

ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் என்றும் கமல் உறுதியாக பதில் அளித்தார்.