சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருமாவளவனுக்கு டெபாசிட் கிடைக்காதபடி தோற்கடிக்க வேண்டும என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராமதாஸ் , சிதம்பரம் தொகுதியில் நான் தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மதுரையில் இருந்தவரை நான்தான் அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தினேன். அதற்காக இன்று என்னை பலரும் திட்டுகிறார்கள்.

2013-ல் தருமபுரி கலவரத்திற்கு பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கட்ட பஞ்சாயத்து, வன்முறை கும்பல் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று சொன்னேன்.தலித் மக்களுக்காக நான் செய்த சேவைகளை பாராட்டி அவர்தான் எனக்கு தமிழ் குடிதாங்கி என்று பட்டம் சூட்டினார். 

ஆனால் தற்போது அரசியலுக்காக கேவலமாக பேசுகிறார். நான் அவரிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டதற்கு உங்களை பேசினால் தான் நான் அரசியலில் வளர முடியும் என்கிறார்.

மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் வரப்போகிறார். அப்போது சிதம்பரம் தொகுதியில் முக்கிய பிரச்சினைகளான ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

முந்திரி விவசாயிகள் பயனடையும் வகையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். சிதம்பரம்-அரியலூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்தை செயல்படுத்தவும் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு வேலை மற்றும் அந்த நிறுவனத்தில் அந்த விவசாயிகளை பங்குதாரர்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளுக்கு நிலத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று போராடி பெற்று தருவோம் என ராமதாஸ் தெரிவித்தார்..