இந்த முறை நோ சான்ஸ் !! அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறார் அருண் ஜெட்லி !!
தற்போது மத்திய நிதி அமைச்சராக உள்ள அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆறை அவர் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சராக உள்ளார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அருண் ஜெட்லி தோல்வி அடைந்தாலும், அவரை மோடி மாநிலங்களவை உறுப்பினராக்கி நிதி அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால் இந்த முறை அருண் ஜெட்லி தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர் சிகிச்சையால் மிகவும் நலிவடைந்துள்ள அவருக்கு, புற்றுநோய் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
தற்போது பிரதமர் மோடி தலைமையில், மத்தியில் மீண்டும், பாஜக அரசு அமைய உள்ளது. அதில், அருண் ஜெட்லி இடம் பெற மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டாயம் அவர் இடம் பெற வேண்டும் என, கட்சி யினர் வற்புறுத்தினால், சாதாரண, முக்கியத்துவம் இல்லாத, ஏதாவது ஒரு துறையின் அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
அதே நேரம், ராகுல் காந்தியைத் தோற்கடித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சராக உள்ள, ஸ்மிருதி இரானிக்கு, முக்கியத்துவம் வாய்ந்த இலாகா ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.