அதிமுக தலைமைமீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை. டெல்லியில் கெத்து காட்டிய இபிஎஸ்.. சைலண்ட் மோடில் ஓபிஎஸ்.
மேலும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
அதிமுக தலைமை மீது எந்த தொண்டனுக்கும் அதிருப்தி இல்லை என தமிழக எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். எதிர்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப் பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம்.
மேலும், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினோம், தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். காவிரி - கோதாவரி நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதங்கள் தான் ஆகிறது அதற்குள் அவர்களை என்ன விமர்சனம் செயவது என்றார்.
அதேபோல் அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் தொடர்ந்து அற்பணிப்புடன் செயல்படும் என்ற அவர், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, லாட்டரி சீட்டை கொண்டுவரும் என்று எனக்கு தகவல் வந்தது, அதன் அடிப்படையில்தான் நான் அறிக்கை விடுத்தேன். ஆனால் நான் கற்பனையில் அந்த அறிக்கை விடுத்ததாக அமைச்சர் கூறுகிறார். அது தவறு என்றார். செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக தலைமையின் மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை என கூறினார்.