மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அதிகாரிகை மக்களே அடித்து, உதைக்கலாம் என பொது மக்களிடம் சொல்லப் போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஒன்றில் பேசினார். 

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்காரி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலை பயமின்றி விரிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தொழில் முனைவோர்கள் அரசு அதிகாரிகளால் துன்புறுத்துவது பற்றியும் குறிப்பிட்டார்.

இன்று நான் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். இதில் போக்குவரத்து கமிஷனர் கலந்துகொண்டார். நான் அவர்களிடம் குறிப்பிட்ட பிரச்சினையை 8 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்று கூறினேன். இல்லை எனில் சட்டத்தை கையில் எடுத்து உங்களை உதையுங்கள் என்று மக்களிடம் சொல்வேன். நீதி வழங்காத எந்த அமைப்பையும் தூக்கி எறிய வேண்டும் என எனது ஆசிரியர் கற்றுக்கொடுத்துள்ளார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல முறை சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.