நிர்மலா தேவிக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்...! நீதிமன்றம் அனுமதி
மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய நிர்மலாதேவியை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய தேவாங்க கல்லூரியின் துணை பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த சில தினங்களுக்கு
முன்பு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, மதுரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக நிர்மலா தேவியை
சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டபோது பாதுகாப்பு
பணியில் ஏராளமான போலீசார் இருந்தனர். சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலா தேவி கொண்டுவரப்பட்டபோது, மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். பெண் வழக்கறிஞர்களும் போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ள நிலையில், நிர்மலா தேவியை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கேட்டது.
நிர்மலா தேவியிடம் முழுமையான தகவல் பெற வேண்டியுள்ளதால், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் நீதிபதிமுன் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், நிர்மலா தேவியை 5 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.