CM Stalin: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!
கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தற்போது இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கடந்த 2ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 21 நாளில் தொற்று எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது. ஒமிக்ரானின் அதிகபட்சமாக பாதிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனையடுத்து, மத்திய பிரதேசம்,உத்திர பிரதேசம் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அமலுக்கு கொண்டு வரலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், டிஜிபி சைலேந்திர பாபு, வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவ வல்லுநர் குழவினர் கலந்து கொண்டுள்ளனர். இதில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்துவது, இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.