புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா !! காங்கிரஸ் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு !!
மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் புதிய அரசை அமைத்துள்ளது. கடந்த மாதம் 30-ந் தேதி பதவி ஏற்ற நிலையில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், பாஜக எம்.பி. ஓம்பிர்லா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பாஜகவின் ஓம் பிர்லாவுக்கு, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி , மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.