ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களுக்கெல்லாம் பதவி !! சும்மா அள்ளிவீசும் டி.டி.வி.தினகரன் !!!
அதிமுகவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறி அக்கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட பெரும்பாலோருக்கு டிடிவி.தினகரன் மீண்டும் பதவிகள் வாங்கி வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் அக்கட்சியை வழி நடத்தி வருகிறார். அதே நேரத்தில் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு தினகரன் பதவிகள் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது அ.தி.மு.க. அம்மா அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜ்சத்யன் நீக்கப்பட்டு உள்ளார்.
அதற்கு பதிலாக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக ஆர்.பாலு, செயலாளராக ஆர்.ராஜ்மோகன், இணை செயலாளராக கேசவன் ஆகியோரை நியமித்து தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பாலு, ராஜ்மோகன் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
ராஜ்மோகன் இதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை செயலாளராக இருந்தார். பாலு தலைவராக இருந்தார். 2014-ம் ஆண்டு இவர்கள் நியமிக்கப்பட்டனர். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி இந்த இருவரையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டு இருந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பு அவர் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட இருவருக்கும் தற்போது தினகரன் பொறுப்புகளை வழங்கி உள்ளார்.
18 வயது முதல் 30 வயது வரை உள்ள வாக்காளர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். அவர்கள் சமூக வலை தளங்களில் இருப்பவர்கள், இதனால் தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை என்ற கருத்தில் அந்த இருவரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது