New party to torget Chennai North District DMK leaders

ஜெயலலிதா இருக்கும் வரை இரும்பு கோட்டையாக இருந்த அதிமுக, அவர் மறைவுக்கு பின்னர், பிரித்தாளும் சூழ்ச்சியால், இரு அணிகளாக பிரிந்து, தற்போது மூன்றாவது அணியும் முளைவிட்டு கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக, திமுக தற்போது வலுவான நிலையில் உள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் மிகவும் வலுவாக உள்ளது. திமுக வலுவாக இருக்கும் வரையில், வேறு எந்த கட்சியும் தமிழகத்தில் தலை காட்ட முடியாது என்பது டெல்லிக்கு நன்றாகவே தெரியும்.

அதனால், டெல்லி மேலிடம் கொம்பு சீவி விட்ட முக்கிய பிரமுகரின், தனி கட்சி விரைவில் உதயமாக இருக்கிறது. அதற்கான கட்சி கொடி, சின்னம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், அரசியலில் அனுபவமும், பணத்தை தண்ணீர் போல வாரி இறைப்பதற்கும் தயக்கம் காட்டாத சிலர், புது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தால் நல்லது என்று, புது கட்சியின் தலைமை விரும்ப, அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க டெல்லி மேலிடம் முன் வந்தது.

முதல் கட்டமாக, திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமான கல்வி வள்ளல் ஒருவரை வளைத்த புது கட்சி தலைமை, அவருக்கு நெருக்கமான கிரிவல கல்வி வள்ளல் ஒருவரையும் தற்போது வளைத்து பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது, திமுக தலைமைக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், தமது தொண்டர்கள் யாரையும், அவர்களால் வளைத்து பிடிக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறது.

ஆனாலும், இரண்டு கல்வி வள்ளல்களும், தொண்டர்களை வளைக்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும், பணத்தை வாரி இறைக்க தயங்க மாட்டார்கள் என்ற ஒரு அச்சமும் திமுக தலைமைக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த், அரசியலுக்கு வரும்போது, பாமகவின் கோட்டையாக விளங்கிய விருத்தாசலத்தில் அவரை நிற்கவைத்து, பாமகவின் அதிருப்தியாளர்களை எல்லாம் ஓர் அணியில் திரட்டி, அவர் வெற்றி பெறுவதற்கு ரூட் போட்டு கொடுத்தவர் பண்ருட்டியார்.

அந்த வழியில், திமுக மற்றும் பாமகவில் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பணம் மற்றும் முக்கிய பதவிகளை வழங்கி, புது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், இரு கல்வி வள்ளல்களும் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி ஆக்டிவாக அரசியலில் இருந்தவரை, எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த முக்கிய புள்ளிகள், தற்போது, அங்கு நிலவும் ரகசிய கோஷ்டி பூசலால் முக்கியத்துவம் இழந்த வருத்தத்தில் இருந்துள்ளனர்.

இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புதிய கட்சி தலைமை, அவர்களை தம் வழிக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் விழுப்புரத்தை சேர்ந்த, திமுக முக்கிய புள்ளி ஒருவருக்கும், ரைடு பயத்தை காட்டி, புதிய கட்சிக்கு தாவ டெல்லி நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தகவல்.

இவ்வாறு, திமுக மிகவும் வலுவாக இருக்கும் வட மாவட்ட திமுக முக்கிய புள்ளிகள் அனைவரும் ரைடு அச்சுறுத்தல் மூலமாக, புதிய கட்சிக்கு வரலாம் என்றே கூறப்படுகிறது.

அதே சமயம், வலுவான தொண்டர் பலத்தை கொண்டுள்ள திமுக, இதற்கு எப்படி பதிலடி கொடுக்க போகிறது? என்பதுதான், இன்னும் புரியாத புதிராக இருக்கிறது என்கின்றனர் அக்கட்சியின் தொண்டர்கள்.