தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 22 தொகுதி இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் தனபால் அறையில் பதவி ஏற்றுக் கொள்ளிகின்றனர். 

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிய அக்கூட் டணி, சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றது. 

மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக, சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி யைத் தக்க வைத்துக்கொண்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இதேபோல அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனை வருக்கும் சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதனையடுத்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது வழக்கமான பணிகளை ஆரம்பிப்பர் என்று கூறப்படுகிறது.

ஆம்பூர்-வில்வநாதன், ஆண்டிப்பட்டி-மகாராஜன், அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, குடியாத்தம்-காத்தவராயன், ஓசூர்-சத்யா, ஓட்டப்பிடாரம்-சண்முகையா, பெரம்பூர்-ஆர்.டி.சேகர், பெரியகுளம்-சரவணக்குமார், பூந்தமல்லி-கிருஷ்ணசாமி, தஞ்சாவூர்- நீலமேகம், திருப்பரங்குன்றம்-சரவணன், திருப்போரூர்-இதயவர்மன், திருவாரூர்-பூண்டி கலைவாணன் ஆகியோர் இன்று பதவி ஏற்கின்றனர்.