அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக வைகை செல்வன் நியமனம்… புதிய நிர்வாகிகளும் அறிவிப்பு !!
அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கழகத்தன் அமைப்புச் செயலாளர்களாக பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்ட 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் அதிமுக செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கூட்டாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜகண்ணப்பன், எஸ்.பி.சண்முகநாதன், கோகுல இந்திரா, சோமசுந்தரம், முக்கூர் சுப்பிரமணியன், புத்தி சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், எம்.பி மைத்ரேயன், முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன், ஆதிராஜாராம், சோமசுந்தரம், என்.முருகுமாறன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக சிவபதியும், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக பரஞ்சோதியும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரனும், மீனவர் பிரிவு இணை செயலாளராக முன்னாள் அமைச்சர் ஜெயபாலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மகளிர் அணி துணை செயலாளர்களாக எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. எல்.ஜெயசுதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.