பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கணுமா? பொங்கி எழுந்த நெல்லை கலெக்டர்...!
தவறான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பொறுத்து கொள்ள மாட்டேன் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது.
கந்துவட்டி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறி இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதைதொடர்ந்து இதுகுறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நெல்லை மாவட்ட ஆட்சியரையும் போலீசாரையும் கிண்டல் செய்யும் வகையில், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். இதையடுத்து அவதூறு பரப்புவதாக கூறி கார்ட்டூனிஸ்ட் பாலா போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினி வெளியே வந்தார்.
இந்நிலையில், கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது தவறான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பொறுத்து கொள்ள மாட்டேன் என்றும் மனசாட்சி தெளிவாக இருக்கும் போது குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.