NEEtT Exam Tamil students are being disturbed - Kamal

ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்றும் டிஜிட்டல் யுகத்தில் இங்கிருந்தே தேர்வெழுதலாமே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆகவே கூடுதல் தேர்வு மையங்கள் ஏற்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்க போதிய காலம் இல்லை என்று சிபிஎஸ்இ பதிலளித்தது. சிபிஎஸ்இ கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்து. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல ஹாசன், டிஜிட்டல் யுகத்தில் இங்கிருந்தே தேர்வெழுதலாமே என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

அதில், இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும் என்று கமல ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.