2010 டிசம்பர் 21 அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுக எம்பியாகவும் அமைச்சராகவும் இருந்த காந்திசெல்வன்தான் நீட் தேர்வு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்ததற்கான ஆளுநரின் பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நீட் விவகாரம் தொடர்பாக அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். “நீட் தேர்வு விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பியதை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பின் மூலமே அறிந்துகொண்டோம். தமிழகத்தில் நேற்றிலிருந்து புரிதல் இல்லாத ஆளுங்கட்சி, ஒரு பிம்பத்தை கட்டமைத்து பொய்யைப் பரப்புகிறது. பிப்ரவரி 2017-இல் தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தமிழக அரசிடம் இதுதொடர்பாக சில சந்தேகங்களை கேட்டது. இந்தச் சந்தேகங்களுக்கு தமிழக அரசு ஏப்ரல், மே மாதங்களில் அப்போதைய தமிழக அரசு பதில் அளித்தது.

இதனையடுத்து செப்டம்பர் 2017-இல், குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசின் பதில் மற்றும் நீட் விலக்கு மசோதா அனைத்தையும் மத்திய அரசு அனுப்பியது. செப்டம்பர் 18, 2017-இல் குடியரசுத் தலைவர், இந்த மசோதாவை ரத்து செய்து, செப்டம்பர் 22 அன்று தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்டதாக அப்போதைய மாநில அரசு அக்டோபர் 25, 2017-ல் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவின் மூலம் அறிந்துகொண்டோம். இப்படி ஏற்கனவே நீட் விலக்கு கோரிய மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு சென்று ரத்தானது.

அதன்பின்பு, 2022-ல் தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதனை சட்டப்பேரவை தலைவருக்கு மீண்டும் அனுப்பியுள்ளார். எதற்காக இந்த மசோதா திரும்ப அனுப்பப்பட்டது என்பது குறித்து ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால், மாநில அரசு அதை இன்னும்கூட வெளியிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் 2020-ஆம் ஆண்டில் சி.எம்.சி வேலூர் மருத்துவக் கல்லூரி, மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு தொடர்பாக பதிலளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரானதா, இந்தத் தேர்வின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்களா என்பது உள்ளிட்ட வாதங்களை மறுத்தது உச்ச நீதிமன்றம். பின்னர் நீட் தேர்வு யாருக்கும் எதிரானாது கிடையாது என்ற உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2010 டிசம்பர் 21 அன்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுக எம்பியாகவும் அமைச்சராகவும் இருந்த காந்திசெல்வன்தான் நீட் தேர்வு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நீட் என்பது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரானதுதான். அதிக கட்டணம் வசூலிக்க எதிரானது. எனவே மாநில அரசு, நீட் விலக்கு மசோதாவை நிராகரித்ததற்கான ஆளுநரின் பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆளுநர் எழுப்பியிருந்த கேள்விகள், அந்தக் கேள்விக்கு அரசு அளித்த பதில் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஏற்புடையது அல்ல" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.