“விவசாயிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறார் மு.க.ஸ்டாலின்...!!!” - வைகோ சரவெடி பேச்சு
விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின், நீலி கண்ணீர் வடிக்கிறார் என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ, இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 45 நாட்கள் போராட்டம் நடத்தினர். இது தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் சாதனை போராட்டம் ஆகும்.
இத்தனை நாள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடத்திய விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கவே இல்லை. அவர்களிடம் என்ன செய்ய முடியும். என்ன முடியாது என்பதை கூட அவர் தெரிவிக்கவில்லை. விவசாயிகளை, பிரதமர் மோடி அவமாப்படுத்திவிட்டார். இதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
அதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்களின் தலைவைர்கள் தா.வெள்ளையன், விக்கிரமராஜா ஆகியோர் முழு கடையடைப்பு நடத்தி மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர். அவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
விவசாயிகளுக்காக மு.க.ஸ்டாலின் தினமும் ஒரு அறிக்கையை விடுத்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், சிறுகுறு விவசாயிகளுக்கு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
ஆனால், இதற்கு முன் அனைத்து விவசாய நல சங்கத்தினரும் திமுகவினரை சந்தித்து, தங்களது தேசிய மற்றும் மாநில வங்கி, கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும்படி வலியுறுத்தினார்கள். ஆனால், அதை செய்யாமல், சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி என அறிவித்தார்கள்.
செய்வதெல்லாம் அப்போதே செய்துவிட்டு, தற்போது ஒன்றுமே தெரியாதது போல் நீலி கண்ணீர் வடிக்கிறார் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.