"ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாவார்" - நவநீதகிருஷ்ணன் எச்சரிக்கை
நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் கட்சி தலைவராக நீடிப்பதில் தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை என நவநீதகிருஷ்ணன் எம்பி கூறினார்.
அதிமுக பொது செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என கூறி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தலைமை தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளனர்.
அதிமுகவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். தற்காலிக பொது செயலாளராக யாரையும் நியமிக்க முடியாது. குற்றவாளியாக தண்டனை பெற்றவர்கள், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் சசிகலா, அதிமுக பொது செயலாளராக நீடிக்க முடியாது. இதற்கு 4 வாரத்தில் முடிவெடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் எம்பி, இன்று சென்னை ராயப்பேட்டையில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தண்டனை பெற்றவர் கட்சித் தலைவராக நீடிக்க அதிகாரம் உள்ளது. உதாரணத்துக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் கூட தண்டனை பெற்றவர்தான். அவரும் தற்போது தலைவராக இருக்கிறார்.
சசிகலா, பொது செயலாளராக நியமித்ததற்கான பதிலை, தேர்தல் கமிஷனடம் ஒப்படைத்துவிட்டோம். இனி எங்களது அதிமுக கட்சி உள் விவகாரத்தில் தேர்தல் கமிஷனோ, நீதிமன்றமோ தலையிட முடியாது. அதற்கான உரிமையும் கிடையாது.
ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக தற்போது நீலி கண்ணீர் வடிக்கிறார். அவரிடம் முதல்வர் பதவியை வாங்கிய பின்னர் எடுத்த இந்த முடிவுகளை ஏன் முன்னதாகவே செய்யவில்லை. அவர் ஆதாயத்துக்காகவே அலைகிறார். அவரை மக்கள் நம்ப மாட்டார்கள்.
ஓ.பென்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார். அப்படி அவர் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவர் மீது பாயும் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.