கடந்த 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொது செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இந்த பதவியை ஏற்குமாறு, ஜெயலலிதாவின் சசிகலாவை, அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் சசிகலா, அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்க கூடாது என அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி சசிகலாவின் போஸ்டர்களை கிழிப்பது, சானம் பூசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அதிமுகவை தலைமையேற்று நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து தீபாவுக்கு ஆதரவாக பல இடங்களில் போஸ்டர், டிஜிட்டல் பேனர், ப்ளக்ஸ் பேனர்கள் வைத்தனர். இதனால், அதிமுக தொண்டர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இந்நிலையில் இன்று காலை, அதிமுக பொது குழு கூடியது. அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஏகமனதாக சசிகலா பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வரும் 2ம் தேதி அவர், அதிமுக பொது செயலாளராக பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்குவார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் கூறியபோது, அதிமுகவை இனி எந்த தீய சக்தியும் நெருங்க முடியாது என்றார்.
