போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்... எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை!!
ஜெயலலிதா வத்து வந்த போயஸ் இல்லத்தை அரசு இல்லமாக அறிவிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் ராமபுரம் தோட்டம். ஜெயலலிதா காலத்தில் போயஸ் தோட்டம் புகழ் பெற்றது. கடந்த 1989 ஆண்டு முதல் ஜெயலலிதா மறைவு வரை தமிழக அரசியலில் முக்கியமான விஐபி இல்லமாக போயஸ் தோட்டம் விளங்கி வந்தது. இங்கிருந்து தமிழக அரசின் பல திட்டங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட காலம் உண்டு. ஜெயலலிதா ஆண்ட காலத்தில் தமிழக அரசின் அதிகார மையமாக போயஸ் தோட்டம் விளங்கி வந்தது.
தனது சிறு வயது முதல், மறைவு காலம் வரை ஜெயலலிதா போயஸ் இல்லத்தில் வசித்து வந்தார். இடையில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் வசிக்கத் தொடங்கினர்.
ஜெயலலிதாவின் தாய்வழி சொத்தான போயஸ் இல்லத்தில், ஜெயலலிதா தவிர அவரது அண்ணன் ஜெயராம் குடும்பத்தினரும், பல ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தனர். 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு தி. நகரில் உள்ள இல்லத்துக்கு ஜெயராம் இடம் மாறினார். அதன் பின்னர், ஜெயலலிதா தனியே சசிகலாவுடன் போயஸ் இல்லத்தில் வசித்து வந்தார்.
ரகசியம் காக்கும் ஒரு இரும்புகோட்டைபோல் போயஸ் தோட்டம் இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சிறை செல்லும் வரை சசிகலா அங்கு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலர் கோரிக்கை வைத்தனர்.
ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் இல்லத்தை அரசுடமையாக்க வேண்டும், அவர் பயன்படுத்திய பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் இல்லத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டார். அத்தையைக் கொன்று விட்டார்கள். பழிக்குபழி வாங்குவேன்.
போயஸ் இல்லம் உள்ளிட்ட சொத்துக்களை மீட்பேன் என்றெல்லாம் தீபா பரபரப்பூட்டினார். இந்த நிலையில், சட்டமன்றத்தில் இன்று பேசிய முன்னாள் டிஜிபியும், மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.