நேஷனல் ஹெரால்டு காங்கிரசின் சொத்து.. ஆர்.எஸ்.எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது..! கே.எஸ் அழகிரி ஆவேசம்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சி
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை, மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையைக் கண்டித்தும், டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், சென்னை சைதாப்பேட்டை,சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி சிலை அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகளை அமைந்திருந்தனர். தடுப்புகளை மீறி காங்கிரசார் ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். இதனையடுத்து, போலீசார் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடை த்தனர்.
நேஷனல் ஹெரால்டு காங்கிரஸ் சொத்து
சென்னையில் 3 நாளாக போராட்டம் நடைபெற்ற நிலையில் நாளை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும். நேசனல் ஹெரால்டு என்பது காங்கிரஸ் கட்சியின் சொத்து , அதை ஆர்எஸ் எஸ் , பாஜக பெயரில் எழுதித் தர முடியாது. அறக்கட்டளை விதிகளின் படியே நேஷனல் ஹெரால்ட் பங்குகளை கட்சிப் பெயரில் இல்லாமல் , கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. காங்கிரஸ் நாத்திக கட்சியோ , இந்து மத எதிர்ப்பு கட்சியோ அல்ல , சாதி , மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி. மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை வரைவுத் திட்ட அனுமதி கொடுத்ததே தவறு. மேகதாது அணையால் காவிரி டெல்டா பாலைவனமாகப்போகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் கொள்கை தான் வெல்லும் , பாஜகவின் அரசியல் சந்தர்பவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது. என தெரிவித்தார்