National flag in Puducherry chief Minister narayanasamy car
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் காரில் தேசியக்கொடி தலைகீழாக இருந்த போட்டோ சமூகவலைதளங்களில் பரவியதையடுத்து தேசியக்கொடியை தவறாக பொருத்திய டிரைவர் இப்ராஹிம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றார். புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்ததார்.

முக்கியமாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து இது குறித்து விவாதித்தார். இதனையடுத்து சென்னை திரும்பிய அவர் தனது கார் மூலம் புதுச்சேரி திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் நாராயணசாமியை பிக்அப் பண்ண வந்த அவரது கார் டிரைவர் இப்ராஹிம், முதலமைச்சரின் காரில் தேசிய கொடியை தலைகீழாக பொருத்தியிருந்தார்.

இதை படம் பிடித்த ஏராளனோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சரின் தனிச் செயலாளர் இது குறித்து விசாரணை நடத்தி, காரில் தேசிய கொடியை தலைகீழாக பொருத்திய டிரைவர் இப்ராஹிமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே ஆளுநர் கிரண் பேடியுடன் பனிப்போர் நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
