கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

அதன்படி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய தமிழகம் முழுவதும் இன்று காலையில் அதிமுகவினர் ஒரே நேரத்தில் கோவில்களில் விளக்கு பூஜை நடத்தினர்.

இந்நிலையில், திண்டுக்கல் உள்ள அமீருன் நிஷா பேகம் பள்ளியில் ஜெயலலிதா பூரண குணம் பெற வேண்டி சிறப்பு துவா ஓதி பிரார்த்தனை நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதனிடையே, தமிழக முதலமைச்சர் பூரண குணமடைய வேண்டி தேனீ மாவட்டம் சின்னமனூரை அடுத்த குச்சனூரை சேர்ந்த ஆயுதப்படை போலீசான வேல்முருகன் என்பவர் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.
அப்பல்லோ வந்த இவர், அவர் வைத்திருந்த பால் குடத்தில் இருந்த பாலை அப்பல்லோ மருத்துவமனை முன்பு நின்றிருந்தவர்களுக்கு வழங்கினார்.
