Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு நிம்மதியே இல்லை...! துன்பம் மட்டுமே அனுபவிக்கிறார்...! ம.நடராஜன் படத்திறப்பு விழாவில் கண் கலங்கிய திவாகரன்...!

Natarajan photo opening ceremony in Tanjore
Natarajan photo opening ceremony in Tanjore
Author
First Published Mar 30, 2018, 3:11 PM IST


முப்பத்து ஐந்து ஆண்டுகளாக சசிகலாவுக்கு நிம்மதியே இல்லை என்றும் அவர் துன்பத்துக்குமேல் துன்பங்களை சந்தித்து வருவதாகவும் ம.நடராஜன் படத்திறப்பு விழாவில் திவகாரன் கண்கள் கலங்கியபடியே பேசினார்.

அண்மையில் மறைந்த ம.நடராஜனின் உருவப்படம் திறப்புவிழா நடைபெறும் என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ம.நடராஜன்,
ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவை நடத்தும் தமிழரசி மண்டபத்திலேயே படத்திறப்பு விழாவும் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நடராஜன் திருவுருவப்படம் தமிழரசி மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.  இன்று காலை 10.30 மணியளவில் படத்திறப்பு நடைபெற்றது.

இந்த விழாவில், டிடிவி தினகரன், பழ.நெடுமாறன், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, நல்லகண்ணு, வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவை துவக்கி
வைத்து பேசிய டிடிவி தினகரன், சசிகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, டாக்டர்கள், இன்ஜினியர்கள் என பல வரன்களைப் பார்த்தனர். நடராசன் நல்லவர் என்பதால், அவரை
என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிகலாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். சசிகலா நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களைச் செய்தவர் நடராசன்
என்று கூறினார்.

Natarajan photo opening ceremony in Tanjore

பழ.நெடுமாறன் பேசுகையில், எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் செய்யப்பட் திருமணம், சசிகலா - நடராசன் திருமணம்தான். அதற்கு முன்பும் பின்பும் ஜாதகம்
பார்க்காமல் யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்கு பெரும் துணையாக இருந்தவர் நடராசன்தான் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்த தோழர் நல்லக்கண்ணு பேசுகையில், கல்லணைக்கும் பெரியகோயிலுக்கும் வருகின்றவர்கள்,
முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் வருவதுபோல நினைவுச்சின்னத்தை அமைத்த நடராசன், இன்னும் மறையவில்லை; அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று
கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எதையும் தாங்கிக் கெள்ளும் சசிகலா, நடராசன் மறைவையும் தாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய நடராசன், எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை என்றும் அவர் பேசினார்.

இறுதியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசும்போது, சசிகலாவைப் பார்த்து நான் ரொம்பவே பயப்படுவேன். எதுவாக இருந்தாலும் அவரிடம் உரிமையாக கேட்டுப்
பெறுவேன். 35 ஆண்டுகளாக சசிகலாவுக்கு நிம்மதியே இல்லை. துன்பத்துக்கு மேல் துன்பங்களைச் சந்தித்து வருகிறார் என்று  கண் கலங்கியபடியே பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios