குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷனர் மோடி அறிவிப்பார்… நக்கல் அடித்த ப.சிதம்பரம் !!!
குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை, பிரதமர், நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ளது என்றும், தேர்தல் ஆணையர் மோடி தேர்தல் தேதியை அறிவிப்பார் என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் தேதிகளுடன், குஜராத் சட்டசபைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.
பிரதமர், நரேந்திர மோடியின் தலையீட்டால், தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குஜராத் அரசு, அனைத்து சலுகைகளையும் அறிவித்த பின், விடுமுறையில் இருந்து, தேர்தல் ஆணையம் அழைக்கப்படும் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாவது முறையாக குஜராத் செல்ல உள்ள, பிரதமர் நரேந்திர மோடியே, பிரசார கூட்டத்தில் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை அவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.