காலமகளே உன் காலில் மாலையாக விழுகிறேன்; அண்ணனைக் காப்பாற்று! நடராஜனுக்காக நாஞ்சில் சம்பத் உருக்கம்!
காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன்; என் அண்ணனைக் காப்பாற்று! என்று சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்காக நாஞ்சில் சம்பத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சசிகலாவின் கணவர் ம.நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டார். தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் அருகே உள்ள மருத்துவமனையில் அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ம.நடராசன், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, அவரைப் பார்ப்பதற்காக, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த ம.நடராசனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ம.நடராசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்ப்பதற்காக சிறையில் உள்ள சசிகலா, கணவரைப் பார்க்க பரோல் வேண்டி மனு ஒன்றை சிறைத்துறையில் அளித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதால், அவரைக்காண பரோல் வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.நடராசனை, டிடிவி தினகரன், தொல்.திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் சென்று பார்த்தனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் அணியில் இருந்து அண்மையில் விலகிய நாஞ்சில் சம்பத், தனது டுவிட்டர் பதிவில் நடராஜன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தேளாக கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்தி வந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன். தமிழ் ஈழ தாகம் கொண்டவன். தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம். கவலை என்னைக் கொத்தித் தின்னுகிறது. காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன். என் அண்ணனைக் காப்பாற்று! என்று அதில் பதிவிட்டுள்ளார்.