Namathu Amma showing the sudden love of 18 MLAs

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான 18 பேரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளிக்க உள்ளது. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, இந்த தீர்ப்பு தமிழக அரசிய்ல களத்தில் வெடிகுண்டாக மாறப்போகிறதா? அல்லது புஸ்வாணமாக மாறப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாடேளான நமது அம்மாவில், இது தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு என்ற தலைப்பில் கவிதை பாணியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சேராத இடம் சேர்ந்து 18 பேர் வீழ்ந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கரம் சிவக்க கொடுத்து சிறந்த கர்ணனம், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால்தான்...

சகுனியை சார்ந்தோர் அழிந்ததும்... சாதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்... அவனை நம்பிய அவல் குசேலனும் அதி குபேரன் ஆனதும்... குலம் பார்த்து கூடியதால் மட்டுமே! திருமாலை வணங்கியதால் முடி துறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்ததுபோல நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியும் முன்னே நன்மைகள் குவிகிறது... என்று அந்த வகிதை நீள்கிறது.

இந்த கவிதை மூலம் டிடிவி தினகரன் தரப்பை துரியோதனர் கூட்டத்தோடு ஒப்பிட்டும், எடப்பாடி பழனிசாமி தரப்பை பஞ்ச பாண்டவர்கள் தரப்போடும் ஒப்பிடப்பட்டுள்ளது. சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் பிரச்சனை இருக்காது என்று மறைமுகமாக 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பதவியை தக்க வைக்கும் நோக்கில் 18 எம்.எல்.ஏக்களை வளைத்து போடும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செயல்பட்டு வருவதாக தெரிகிறது.