Nainar nagendren speech in tirunelveli

ஆண்டாளை பழித்துப் பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாய் தரவும் தொண்டர்கள் தயாராக இருப்பதாகவும், இனிமேல் இந்துக்களை பழித்துப் பேசுபவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியும் இந்துக்கள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வைரமுத்து மீது விருதுநகர் மற்றும் சென்னையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் வைரமுத்துவை கண்டித்து பாஜக சார்பில் நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கவிஞர் வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.

வருங்காலங்களில் இந்துக்களை பழித்து பேசினால் கொலைசெய்யவும் தயாராகுங்கள் என நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். நயினாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்து குறித்து பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நயினாரின் பேச்சும் பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நயினார் நாகேந்திரன் சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.