அதிமுக பற்றி நயினார் நாகேந்திரன் சொன்னது சரிதான்.. மீண்டும் சீனுக்கு வரும் டிடிவி.தினகரன்..!
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் டி.டி வி. தினகரன் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடை பெற்றுவிட்டதாகவும் முடிவுகள் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அரசியல் வியாபாரம் இல்லை. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆளும் கட்சியின் இயலாமை. எனவே, மார்ச் மாதங்களில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தைகள் தவறானது என்றார். அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் அதை குழந்தையை கேட்டாலும் சொல்லும். அதைதான் நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ளார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.