வெண்டிலேட்டரே இல்ல.. இதிலிருந்தே தெரிய வேணாமா..? கருணாநிதி நல்லா இருக்காரு!! முத்தரசன் பேட்டி
செயற்கை சுவாச கருவி கூட கருணாநிதிக்கு பொருத்தப்படவில்லை. அதிலிருந்தே அவர் நன்றாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மனமுடைந்த தொண்டர்கள், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீரடைந்தது என்றதும் சற்று ஆறுதல் அடைந்தனர். விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், அதிகாலையில் சற்று கலைந்து சென்றனர். மீண்டும் காலை முதல் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த வண்ணம் உள்ளனர். இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கருப்பண்ணன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து பலரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். காவேரி மருத்துவமனைக்கு வந்த முத்தரசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நேற்றைவிட கருணாநிதி இன்று நன்றாக இருக்கிறார். நேற்று குடியரசு துணை தலைவர், கருணாநிதியை சந்தித்த புகைப்படம் வெளியானது. அதில்கூட செயற்கை சுவாச கருவி பொருத்தப்படவில்லை. அதிலிருந்தே அவர் நன்றாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும். போராட்ட குணம் கொண்ட கருணாநிதியை எதிர்த்து இயற்கை போராடி கொண்டிருக்கிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது என முத்தரசன் தெரிவித்தார்.