சகிப்புத் தன்மையற்ற சமூக விரோத சக்தி திமுக.. பாஜகவில் சேர்ந்ததற்கு கொலையா? கொதிக்கும் எச்.ராஜா..!
திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (50). திமுக வார்டு செயலாளராக இருந்த வடிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். இதனால் வடிவேலுக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் தம்பி என்கிற ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நாகராஜபுரம் பகுதியில் உள்ள தலவுமலை விநாயகர் கோவிலில் வடிவேல் மற்றும் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்திக்கும் வடிவேலுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலானது. இதில், ஆத்திரமடைந்த ஈஸ்வரமூர்த்தி கீழே கிடந்த கல்லால் வடிவேலை சரமாரியாக தாக்கியதில் மயக்கமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். பின்னர் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வீட்டிற்கு சென்று வடிவேல் இரவு படுத்து தூங்கி மறுநாள் காலையில் பார்க்கும் போது உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே வடிவேல் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் திமுகவினர் வடிவேலை அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டினர். கொலை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வடிவேலு அவர்கள் திமுக வினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. திமுக சகிப்புத் தன்மையற்ற சமூக விரோத சக்தி என்று நிரூபணமாகியுள்ளது என எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.