தொகுதி பக்கம் தலையை காட்ட முடியவில்லை. மக்கள் எங்களை விரட்டியடிக்கிறார்கள். உப்பு போட்டு சாப்பிறீங்களா என கேட்கிறார்கள் என்று கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு, தனது ஆதரவை இன்று காலையில், அவரது வீட்டுக்கு நேரில் சென்று தெரிவித்தார். கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவிடம் இருந்து விலகி வந்தார். அதன்பிறகு, அவர்கள், தொண்டர்கள் இல்லாத கூட்டமாக செயல்படுகிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், 2 மாதமாக ஆட்சி நடத்தி, மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றவர் ஒ.பி.எஸ்.

அவரிடம் என்ன குறை இருக்கிறது. அவரை மிரட்டி, கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்கள். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கும் சசிகலாவுக்கு மக்கள், பாடம் புகட்டுவார்கள்.

தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்தான். கட்சி தொண்டர்களுக்கே விலை பேசும் தலைமை இங்கு கிடையாது. அந்த தலைமை அங்கே யாரும் இல்லாமல் ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா வீட்டில், வேலைக்காரியாக இருந்தவருக்கு, முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. வீட்டு வேலை செய்வதுதான் வேலைக்காரியின் வேலை. முதலமைச்சர் பதவிக்கு ஆசை படக்கூடாது.

எங்களால் தொகுதி பக்கம் தலையை காட்ட முடியவில்லை. மக்கள் எங்களை விரட்டியடிக்கிறார்கள். உப்பு போட்டு சோறு சாப்பிறீயா என கேட்கிறார்கள். இனி அதிமுக ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கிறது. அதிமுகவை யாரும் ஆட்டவும் முடியாது. அசைக்கவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.