மகள் திருமணத்தில் ஜெ. படத்துக்கு உரிய மரியாதை தராத நவநீதகிருஷ்ணன்...! குமுறும் அதிமுக நிர்வாகிகள்
மகள் திருமண விழாவில், ஜெயலலிதா படத்தை தரையில் வைத்து உரிய மரியாதையைத் தர தவறிவிட்டதாக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மீது அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதிமுக எம்.பி.யும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான நவநீத கிருஷ்ணனின் மகள் திருமணம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இந்த திருமணவிழாவுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வருகை தந்தனர். திருமண மண்டபத்துக்கு வெளியே ஜெயலலிதா படத்துடன் பிரம்மாண்டமான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து மண்டபம் வரையில் அதிமுக கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களை வரவேற்று சுமார் 50 பிளக்ஸ் பேனர்களை நவநீதகிருஷ்ணன் வைத்திருந்தார்.
மேலும், மண்டபத்தின் நுழைவாயில் பூக்களால் பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு மணமக்கள் பெயர் எழுதப்பட்ட அலங்கார போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழே தரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் தரையில் சாய்க்கப்பட்டவாறு வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த அதிமுகவினர் சிலர் முகம் சுழித்தனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இருந்த மரியாதை வேறாக இருந்தது. இப்போது அவருக்கு உண்மையாக இருப்பவர்கள், அதே மரியாதையை கொடுத்து வருகின்றனர். ஆனால் இங்கு, பெயரளவுக்காகவே ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருப்பதாக அதிமுகவினர் ஆதங்கம் தெரிவித்தனர். அதேபோல் மண்டபத்தின் உள்ளேயும் மிக சிறிய அளவிலான ஜெயலலிதா படத்தைத்தான் வைத்திருந்தார்.
ஜெயலலிதா அவருக்கு (நவநீதகிருஷ்ணனுக்கு) மிகப்பெரிய பதவிகளை தந்தார். அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், அனைத்து கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் என முக்கியஸ்தர்கள் பலர் வருகையில், ஜெயலலிதாவின் படம் மலர்களால் அலங்கரிக்காமல் நவநீத கிருஷ்ணன் எம்.பி இப்படி செய்து விட்டாரே என்று அதிமுகவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.