மூன்றாக உடைந்த மூவர் அணி…. தனித்தனியாக பிரிந்து சென்றதால் பரபரப்பு….
என்ன பிரச்சனையாக இருந்தாலும் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து எதிர் கொண்ட அந்த மூவர் அணி தற்போது மூன்றாக உடைந்து போனது என்றே சொல்ல வேண்டும். ஆளுக்கொரு திசையில் பயணிப்பதால் அவர்களின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், மூன்று பேரும் இணைந்து செயல்படத் துவங்கினர். எனவே, 'மூவர் அணி' என, அழைக்கப்பட்டனர். விவசாயிகள் பிரச்சனை, பேரறிவாளன் பரோலில் விடுதலை செய்யப்பட்டது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் மூவரும் இணைந்து செயல்பட்டனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.நடிகர் கருணாஸ், நேற்று தி.மு.க., சார்பில் நடந்த, போட்டி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.
தனியரசு, வழக்கம்போல், சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிமுன்அன்சாரி, இரு இடங்களுக்கும் வரவில்லை.இதனால், மூவர் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது அவர்களது தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.