குறிவைக்கப்படும் மொகபூபா முப்தி..?? தனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக பகீர் குற்றச்சாட்டு..
தனக்கு பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சிஐடி அறிக்கை கொடுத்துள்ளதால், தனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் கூறப்பட்டிருப்பதாக மெகபூபா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி தனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதான் 2019 க்கு பிறகு காஷ்மீரில் திரும்பிய இயல்புநிலை எனவும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி காஷ்மீரில் செல்வாக்குமிக்க தலைவராவார். கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதற்கு அவர் உட்பட காஷ்மீரின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் ஓராண்டு காலத்திற்கு மேல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நாடு முழுதும் இது பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்பால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்கள் அனைவரும் தொடர்ந்து உளவுத் துறையின் கண்காணிப்பில் கீழ் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டவிரோத பணம் பரிமாற்ற குற்றச்சாட்டு ஒன்றில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் மெகபூபா முப்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரைக் கட்டாயப்படுத்தி அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் தன்னிடம் கையொப்பம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய அரசின் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டை மெகபூபா முன்வைத்துள்ளார். அதாவது தனக்கு பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்து விட்டது என்றும், தனக்கு பாஸ்போர்ட் வழங்குவதன் மூலம் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சிஐடி அறிக்கை கொடுத்துள்ளதால், தனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் கூறப்பட்டிருப்பதாக மெகபூபா தெரிவித்துள்ளார். அதாவது இந்தியா போன்ற ஒரு வலிமைமிக்க தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்பது வேடிக்கையாக உள்ளது. இதுதான் ஆகஸ்ட் 2019 க்கு பிறகு காஷ்மீரில் திரும்பியுள்ள இயல்பு நிலை என மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.