மோடிதான் எனது ஒரே தலைவர்.. கட்சி பொறுப்பு பறிபோன சோகத்தில் காயத்ரி ரகுராம் ட்வீட்..!
கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பெப்சி சிவக்குமார் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில துணைத்தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் ஆகியோரின் பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்களிலேயே, அப்போது பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து எல்.முருகன் விலகியதை அடுத்து அந்த பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட உடனேயே தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பெப்சி சிவக்குமார் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை தன்னை பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என காயத்ரி ரகுராம் நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சி பொறுப்பு பறிபோன பின் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில்;- ”எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என குறிப்பிட்டிருக்கிறார்.