சமஸ்கிருதத்தை திணிப்பது மோடி அரசு... அதை எதிர்க்காமல் இருப்பது எடப்பாடி அரசு... காய்ச்சி எடுத்த மு.க.ஸ்டாலின்!
சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. சமஸ்கிருத மொழி திணிப்பை தமிழக முதல்வர் எதிர்க்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம் 2021’ சிறப்பு தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை ஆகும். இக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் ஆரம்ப கல்வியைக் கூட தடுக்க திட்டமிடப்படுகிறது. மத்திய அரசு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித் தொகையை நிறுத்துவது கல்வியை தடுப்பதற்கு சமம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகர் டெல்லி கடந்த 20 நாளாக நடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும். ஆனால், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இந்தச் சட்டம் மிகவும் நல்ல சட்டம் என மத்திய அரசு விவசாயிகளுக்கு பாடம் எடுக்கிறது. போராடும் விவசாயிகளை உள் துறை அமைச்சர் இதுவரை சந்திக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? வருகிற வெள்ளிக்கிழமை சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நூறாண்டு காலக் கோரிக்கை ஆகும். அதை முதல் நிபந்தனையாக வைத்து முந்தைய ஐ.மு.கூட்டணியிடமிருந்து கருணாநிதி பெற்றுக்கொடுத்தார். ஆனால், தமிழ் மொழியைக் காக்க உருவாக்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம், தற்போது எந்த நிலையில் இருக்கிறது?
சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. சமஸ்கிருத மொழி திணிப்பை தமிழக முதல்வர் எதிர்க்கவில்லை. மத்திய அரசு பணி தேர்வுகளை இந்தியில் நடத்துவதையும் தமிழக அரசு கண்டிக்கவில்லை. தமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை என முதல்வரால் கூற முடியுமா? அதிமுக மட்டும் நினைத்திருந்தால் குடியுரிமைச் சட்டம் நிறைவேறி இருக்காது” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.