பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதற்கட்ட சூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ஒருபுறம் திரைப்படம் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்ததால் சில நாட்களாக கட்சிப் பணிகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பிக் பாஸ் சூட்டில் பிஸியாக இருந்த கமல்ஹாசன், பிரசார களத்திற்கு வருவேன் என்று டுவிட்டரில் பதிவிட்டதோடு அமைதியானார். அந்தக் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவித்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி ஒன்பது மாவட்டங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிய்னர் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தமது பிரசாரத்தை தொடங்குகிறார்.

முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கும் கமல்ஹாசன், அடுத்த கட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 30ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார். இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்றுள்ளது.