RK Nagar constituency Competition Coalition leaders are in disarray
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து வரும் 12ம் தேதி, அந்த தொகுதியில் இடை தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைதொடர்ந்து அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரனும், தீபா அணியில் தீபாவும், திமுகவில் மருதுகணேஷ், தேமுதிகவில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நிறுத்தப்படுவதாக பேசப்படுகிறது. ஆனால், உறுதியான முடிவு இதுவரை வரவில்லை. பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மக்கள் நலக் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆர்.கே. நகரில் போட்டியிட்டது. ஆனால், இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளனர்.
இதுபற்றி மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை கேட்டபோது, அனைத்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்றனர்.

