ஆர்.கே. நகர் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் ம.ம.க.!
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் காலியாக இருந்தது. இதையடுத்து இடைத்தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது.
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது திமுக வேட்பாளராக மருது கணேஷ் நிறுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவரே நிறுத்தலாமா? என்பது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி கூறியுள்ளது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே. நகர் தொகுதியில் திமுகவுக்கு ம.ம.க. ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
மேலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.