நாளை காலை எம்.எல்.ஏக்களை மீட்க அரசு அதிரடி ஆக்ஷனில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலிட உத்தரவின் பேரில் காலை 7 மணிக்கு கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஓபிஎஸ் , சசிகலா அணிகளாக அதிமுக பிளவுபட்டு கிடக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பும் கூறிவந்த நிலையில் கூவத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களின் பிடியில் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதையடுத்து வேகம் பெற்ற மேலிடம் மாவட்ட எஸ்பி முத்தரசியை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் எஸ்பி முத்தரசியுடன் திருவண்ணாமலை எஸ்பி விஜயகுமாரையும் உடன் சென்று கூவத்தூரில் ஆய்வு செய்ய மேலிடம் உத்தரவிட்டது.

ஆய்வின் முடிவை அடுத்து மேலிடத்திலிருந்து தற்போது கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும். அனைத்து போலீஸ் உயரதிகாரிகள் டிஐஜி , ஐஜி லெவலில் உள்ளவர்கள் கூவத்தூருக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையிலும் காலை 5 மணிக்கே ஆயுதப்படை மற்றும் சிறப்புகாவல்படை , சட்டம் ஒழுங்கு போலீசார் 10 ஆயிரம் பேர் கூடும்படி கமிஷனரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த நிலைக்கும் போலீசார் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் காலை 7 மணி அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் டீம் அதிரடியாக கூவத்தூரில் நுழைய உள்ளதாகவும் அவர்கள் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமைதியாக இது நடந்தால் பிரச்சனை இல்லை. அதையும் மீறி நடந்தால் அதற்கும் தயாராக இருக்கும் படி சென்னை , காஞ்சி, திருவண்ணாமலை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.
ஆகவே நாளை காலை கூவத்தூர் ஒரு பரபரப்பான காட்சியை எதிர்கொள்ள போகிறதாம்.
