குன்னுார் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த சம்பவத்தில் திமுக வை விமர்சித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டித்துள்ளார்.
மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரிய காலனியில் வசிக்கும் மாரிதாஸ் அவ்வப் போது தி.மு.க. அரசை விமர்சித்து டிவிட்டரிலும் யூடியூபிலும் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதுதொடர்பாக மாரிதாஸ் டிவிட்டரில் தி.மு.க. ஆட்சி குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இது பிரிவினைவாதத்திற்கு எதிரானது என்பதால் மதுரை போலீசார் தாங்களாகவே முன்வந்து மாரிதாஸ் மீது சைபர் கிரைம் சட்டப்பிரிவு 153 ஏ, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 153 ஏ பிரிவு என்பது மதம் இன குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்திற்கு எதிரானது. 505(2) பிரிவு என்பது ராணுவவீரர்கள் தொடர்பாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துதல், பகைமையை ஏற்படுத்துதல் ஆகும்.

இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸ் கைதுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டிற்கு ஏற்பட்ட இந்த பெரும் சோகத்தை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது பல்வேறு மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். ஆனால், தமிழகம், காஷ்மீர் போல பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் மாரிதாஸ் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

மேலும் மாரிதாஸை அவசரமாக கைது செய்த காவல்துறையினர், முப்படை தலைமைத் தளபதி மரணத்தை கொண்டாடி அவர்களையும் நமது ராணுவத்தையும் அவமதிக்கும் வகையில் பதிபவர்களை கைது செய்யவில்லை எனவும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இப்போது, மட்டும் அல்ல, பிரிவினைவாதம் பேசுவோர் மீது எப்போதுமே திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டியுள்ளார்.
பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. திமுகவின் கொள்கையும் திமுக அரசின் செயல்பாடுகளையும் மிக கடுமையாக விமர்சித்து வருபவர் மாரிதாஸ். இந்தப் பின்னணியில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாகப் பேசும் கட்சி திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களை ஆதரிப்பவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரம் உண்டு என்ற வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று விமர்சித்துயுள்ளார்.

திமுக வை எதிர்க்கும் குரலை ஒடுக்கும், ஜனநாயகத்திற்கு எதிரான, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை திமுக அரசு கைவிடவேண்டும் என்றும் மாரிதாஸ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
