மாமனார் சாவுக்கு கூட போக விடாத கொடுமை - து.சி.மோகன் எம்எல்ஏ அழுது ஆர்ப்பாட்டம்..
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்பதாக இருந்தது. ஆனால் முதலமைச்சராக இருந்து ஓபிஎஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சசிகலா, ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்து செயல்படுகின்றன.
இதனால் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் சென்னை அருகே கூவாத்துரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏக்கள் வெளியில் எங்கும் சென்றுவிடாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை குடும்பத்தினர்,உறவினர்கள் என யாருமே பார்க்க முடியாதபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்யாறு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும்ன துசி.கே.மோகனின் மாமனார் குப்புசாமி, நேற்று காலை மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க எம்எல்ஏ மோகனுக்கு தகவல் அனுப்ப அவரது குடும்பத்தின்ர் முயற்சி செய்தனர்.
ஆனால் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 'கோல்டன் பே' ரிசார்டில் ஜாமர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், மோகனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆனாலும் பல வழிகளில் தகவல் சொல்லப்பட்டு பிற்பகல் 3 மணிக்குத்தான் பலத்த பாதுகாப்புடன் மாமனார் ஊருக்கு போய் சேர்ந்தார்.
அங்கு 40 நிமிடங்களுக்கு மேல் இறுதிமரியாதை செலுத்த மோகனுக்கு சசிகலா தரப்பினர் அனுமதி தரவில்லை. இதனால் மோகனும் அவரது உறவினர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.