M.K.Stalin dreams are at risk - Minister C.V.Shanmugam

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பால், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவுக்குத்தான் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பினார். இந்த தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் சில தெளிவுகள் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ளது. 3 மாத காலத்திற்குள் இதுகுறித்து தங்களுடைய கருத்தை மத்திய அரசு மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் மனுவை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசு தலைவர் நிராகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது தமிழக அரசு தன் கருத்தை வலியுறுத்தி அவர்களது விடுதலைக்கு முயற்சி மேற்கொள்ளும் என்றார்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதனால், வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த வழக்கின் தீர்ப்பால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் கனவுக்குத்தான் ஆபத்தாகி உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.