டெல்லியில் வலை விரிக்கும் பாஜக... எச்சரித்த ஸ்டாலின்... பீதியில் எம்.பி.க்கள்..!
திமுக எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.
திமுக எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் நடைபெறவே இல்லை. இந்த நிலையில் நேற்று ஒரு வழியாக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் ஆஜராகியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் திமுக எம்.பி.க்கள் அனைவரும் அறிவாலயம் வந்துவிட்டனர்.
கூட்டத்தில் முதலில் துரைமுருகன் தான் பேசியதாக சொல்கிறார்கள். வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு பேச்சு அரசியல் பக்கம் சென்றுள்ளது. தேசிய அளவில் பாஜக மிகவும் ஆக்ரோசமான அரசியலை முன்னெடுத்து வருகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் ஆக்ரோசமாக இருந்தோம். ஆனால், பாஜக நம்மை அச்சுறுத்த நினைக்கிறது. நமக்கு ஆதரவான தொழில் அதிபர்களை குறி வைக்கிறது.
எனவே டெல்லியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். பின்னர் பேசிய ஸ்டாலினும் இதே பாணியில் தான் பேசியதாக சொல்கிறார்கள். தொகுதிக்கு செல்ல வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக செலவிட வேண்டும் என்பன போன்ற வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு மிகவும் சீரியசாக அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார் ஸ்டாலின்.
மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கூட பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள தயாராகிவிட்டனர். அந்த அளவிற்கு பாஜக நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. அசுர பலத்துடன் இருப்பதால் பாஜக தற்போது என்ன வேண்டுமானாலும் செய்யும்? அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காலூன்றிய பாஜக அடுத்ததாக கேரளா, தமிழகத்தை தான் குறி வைத்துள்ளது.
தமிழகத்தில் பாஜக நம்மை தான் பிரதான எதிரியாக கருதுகிறது. அதனால் நாமும் அவர்களை அப்படி கருதுவதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பாஜகவின் புரோக்கர்கள் சிலர் நம் எம்பிக்களை சுற்றி வருவது எனக்கு தெரியும். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற எதுவும் செய்வார்கள். எம்பிக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.